அழகான வெண்மலரே.... அரிவரியில் நான் கண்ட என் முதல் நட்பே... அதிகாலை வேளையிலே அடுக்கடுக்காய் பூத்திடுவாய் ... அள்ளி எடுத்த மஞ்சள் தனை முகமதிலும் நீ பூசிக்கொள்வாய் மலர்ந்திடும் பூக்களை மறந்தேனும் நான் பறித்ததில்லை..... ஆயினும் நீ உதிர்த்த பூவெல்லாம் தவழ்ந்தாடும் என் கைகளிலே.... பள்ளி எனும் போதினிலே கண்ணில் வரும் வெண் நிலவே... பட்டப்படிப்பினிலும் தொடர்ந்த நட்பே சித்திர ஆசானின் சிறப்பான கைவண்ணமே.... சிந்தையில் வலம் வரும் என் தாய் வீட்டுச்சீதனமே...
ஆகஸ்து பூவே ஆரவாரமற்ற பெண் மலரே ஆயிரமாயிரம் அழகு சேர்த்து ஆள்கின்றாயே அனைவரையுமே ஆவணி மாதம் வரை காத்திருப்பேன் - உன் தரிசனம் கிடைப்பதற்காய் தரணியிலே பூ - உனக்காய் இனம் புரியா உறவொன்று இன்று வரை தொடர்கிறதே பீனிக்ஸ் புஷ்பமென மீண்டெழும் அதிசயமே எதிர்பார்ப்புக்கள் ஏதுமற்று காத்திருப்புக்கள் பலதும் தாண்டி என்னோடு ஒன்றாக - பயணிக்கிறாய் எனதருமை நண்பனைப்போல்
Comments
Post a Comment